நெற்பயிர், மரங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்


நெற்பயிர், மரங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 12 Feb 2020 10:45 PM GMT (Updated: 12 Feb 2020 9:23 PM GMT)

பாப்பாரப்பட்டி அருகே நெற்பயிர், மரங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கோரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன்கள் சின்னசாமி, லட்சுமணன். விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமாக 1½ ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஒரு விவசாய கிணறு, 2 ஆழ்துளை கிணறு 35 தென்னை மரங்கள், பனை மரங்கள், நெற்பயிர் மற்றும் ஒரு தார்சு வீடு ஆகியவை உள்ளன. சின்னசாமி நிலம் வழியாக உயர்மின் கோபுர மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உயர்மின் கோபுரம் அமைக்கும் சின்னசாமி நிலத்திற்கு பவர் கிரிட் நிறுவனம் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் ஊழியர்கள் தொடர்ந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நெற்பயிர், மரங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி நேற்று காலை மண்எண்ணெய் கேனுடன் தனது நிலத்தில் உள்ள 130 அடி உயரமுள்ள உயர்மின் கோபுரத்தில் சின்னசாமி ஏறி அங்கிருந்து தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். தகவல் அறிந்து வந்த இண்டூர் போலீசார், சின்னசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்த்துறை மற்றும் பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் வந்து இழப்பீடு கொடுத்தால் மட்டுமே தான் கீழே இறங்கி வருவேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நல்லம்பள்ளி தாசில்தார் சரவணன், பவர் கிரிட் நிறுவன மேலாளர் வெங்கட்ராமன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து சின்னசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மரங்கள், கிணறு, விவசாய பயிர் ஆகியவற்றை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து சின்னசாமி உயர்மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story