அரியாங்குப்பம் என்ஜினீயர் கொலையில் தம்பி உள்பட மேலும் 2 பேர் கைது


அரியாங்குப்பம் என்ஜினீயர் கொலையில் தம்பி உள்பட மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2020 12:12 AM GMT (Updated: 13 Feb 2020 12:12 AM GMT)

அரியாங்குப்பம் என்ஜினீயர் கொலையில் தம்பி உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்,

புதுவை வீராம்பட்டினம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 70). மீன் வியாபாரி. இவருடைய மனைவி அன்னக்கொடி (65). இவர் களுக்கு ரஞ்சித்குமார் (40), செந்தில்குமார் ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

இதில் என்ஜினீயரான ரஞ்சித்குமார் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற அனிதாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனைவியுடன் பிரான்சில் வசித்து வந்தார். அங்கு சரியான வேலை எதுவும் கிடைக்காததால் கடந்த மாதம் அங்கிருந்து ரஞ்சித்குமார் மட்டும் வீராம்பட்டினத்திற்கு வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் பணம் கேட்டு பெற்றோரை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

கடந்த 10-ந்தேதி அன்றும் பணம், சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த குமார் வீட்டில் இருந்த ஐஸ் உடைக்கும் கம்பியை எடுத்து தாக்கியதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் ரஞ்சித் குமார் சரிந்து விழுந்தார். சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், அன்னக் கொடியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்ததில் ரஞ்சித்குமாரின் தம்பி செந்தில்குமார் (35), அவரது நண்பர் வீராம்பட்டினத்தை சேர்ந்த செல்வம் (52) ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது போலீசுக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீசில் செந்தில்குமார் அளித்த வாக்குமூலத்தில் அண்ணன் ரஞ்சித்குமார் குடிபோதையில் தாக்கியது பற்றி தந்தை என்னிடம் போனில் தெரிவித்தார். உடனே நானும், நண்பர் செல்வமும் அங்கு சென்றோம். தந்தை தாக்கியதில் மயங்கி கிடந்த அவரது கை கால்களை சேலையால் கட்டி, சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் துடிதுடித்து இறந்து போனதாக தெரிவித்தார்.

இதையடுத்து ரஞ்சித்குமார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில்குமார், செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

ரஞ்சித்குமார் கொலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் பிரான்ஸ் நாட்டில் இருந்து அவரது மனைவி அனிதா புதுவைக்கு புறப்பட்டு வருகிறார்.

Next Story