குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 12:25 AM GMT (Updated: 13 Feb 2020 12:25 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு புதுவை சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் நாராயணசாமி தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அரசு கொறடா அனந்தராமன்: நாட்டு மக்களை பிரித்தாள பாரதீய ஜனதா கட்சி சூழ்ச்சி செய்கிறது. மக்களுக்கு தேவையானதை செய்யும் உரிமை, கடமை நமக்கு உள்ளது. புதுவை சட்ட சபைக்கு கொல்லைப்புறமாக வந்த 3 பேருக்கு சட்டமே தெரியவில்லை. இந்த சட்டத்தை பல மாநிலங்கள் எதிர்த்து உள்ளன. இது மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. இங்குள்ள சில மேதாவிகள் தீர்மானம் கொண்டுவரக்கூடாது என்கிறார்கள்.

லட்சுமிநாராயணன் (காங்): குடியுரிமை திருத்த சட்டம் இந்தியா-பிரெஞ்சு ஒப்பந்தத்துக்கு எதிரானது. மத்திய அரசு இந்திய மக்களின் மனங்களை பிரிக்க பார்க்கிறது. மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை மீறி செயல்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் பொது சிவில் சட்டம் வரும். முதல்-அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியதாக தகவல்கள் வந்தது. அதில் என்னதான் உள்ளது?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: கவர்னர் அனுப்பிய கடிதத்தை நான் இன்னும் பிரிக்கவே இல்லை. ஆனால் அந்த கடிதம் எனக்கு வரும் முன்பே சமூக வலைதளத்தில் வந்துவிட்டது. (கடிதம் வந்த கவரை பிரிக்கிறார்). கவர்னர், முதல்-அமைச்சர் இடையே நடைபெறும் கடித போக்குவரத்து ரகசியமானது. அதனை சமூக வலைதளத்தில் பதிவிடுவது என்பது விதிமீறல் ஆகும். உயர் பதவியில் இருப்பவர்கள் கண்ணியத்தை காக்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த பதவிக்கு அவர்கள் லாயக்கற்றவர்கள்.

வெங்கடேசன் (தி.மு.க.): குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். இதற்கு ஆதரவாக சுமார் 2 கோடி மக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சட்டம் நாட்டுக்கும் தேவையில்லை. புதுச்சேரிக்கும் தேவையில்லை. இந்த மக்கள் விரோத சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

சிவா (தி.மு.க.):- மக்கள் விரோத நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும்போது அதை முதலில் எதிர்ப்பவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அந்த வகையில்தான் மத்திய அரசு இந்த கருப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது முதல் எதிர்ப்பு குரலை பதிவு செய்தார். இச்சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகள் தமிழகம், புதுச்சேரியில் ஓரணியில் நின்று போராட்டங்கள் நடத்தியுள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள், பெண்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் என பலதரப்பு மக்களும் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெயமூர்த்தி (காங்): 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு மக்களுக்கு துன்பம் தருகிறது. இதனால் பல மாநிலங்களில் தொடர் தோல்வியை சந்திக்கிறது. அதை பார்த்தாவது அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியே போனால் இந்தியா ஒன்றாக இருக்காது.

துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன்: நமது கவர்னர் மிகப்பெரிய அறிவாளி. போராளி பெண்மணி. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இவர் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட தீர்மானத்தை எப்போதாவது மதித்து உள்ளாரா? பிறருக்கு உபதேசம் செய்யும் முன்பு முதலில் தன்னை பார்க்கவேண்டும். அதற்கு நீங்கள் தகுதி உள்ளவரா? என்றாவது அரசியல் அமைப்பு சட்டத்தை கடைபிடித்தது உண்டா? என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் பேசிவருகிறார்.

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியின் நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறைகளை சொல்ல வேண்டிய இடம் சட்டமன்றம்தான். தவறு இருந்தால் நாங்கள் திருத்திக்கொள்வோம்.

அமைச்சர் ஷாஜகான்: குடியுரிமை திருத்த சட்டத்தினால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். தேசிய குடிமக்கள் பதிவேட்டினால் இந்தியாவில் பரம்பரையாக வசிக்கும் பலர் குடியுரிமை இழப்பார்கள்.

அமைச்சர் கமலக்கண்ணன்: குடியுரிமை திருத்த சட்டம் இந்துக்களை பாதிக்கும். புதுவையில் வசிப்பவர்களில் பாதிபேர் குடிபெயர்ந்தவர்கள். அவர்களும் குடியுரிமையை இழப்பார்கள். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் வாயை திறந்தால் ஒன்று சாப்பிடுவார்கள். அல்லது பொய் சொல்வார்கள்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியும் எப்போதாவதுதான் வாய் திறப்பார். மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதாவது பேசியது உண்டா? தினமும் அறிக்கைவிடும் அ.தி.மு.க. இதற்கு கருத்து தெரிவித்தது உண்டா? எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மக்கள் பிரச்சினையை பேச சட்டமன்றத்துக்கு வரமாட்டார். நேராக முதல்-அமைச்சராகத்தான் வருவார். முதல்-அமைச்சர் பதவியில் அப்படி என்னதான் சுகத்தை கண்டார்களோ? முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டால் நான் இப்போதே எழுதிக்கொடுத்துவிட்டு (ராஜினமா செய்துவிட்டு) போய்விடுவேன். அந்த அளவுக்கு தொல்லைகளை கவர்னர் மூலம் சந்தி்த்து வருகிறோம். கேரளாவில் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒன்றாக உள்ளனர். அவர்கள்தான் மக்கள் தலைவர்கள்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், ராமச்சந்திரன், ஜான்குமார் உள்ளிட்டோரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தனர்.

Next Story