காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல் நெய்வேலியில் வைகோ பேட்டி


காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல் நெய்வேலியில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 2:22 PM GMT)

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று நெய்வேலியில் வைகோ கூறினார்.

நெய்வேலி, 

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று நெய்வேலியில் வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெய்வேலியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நெற்களஞ்சியம் 

ஆசியா கண்டத்தில் நெற்களஞ்சியமாக இருந்த காவிரி டெல்டாவை பாலைவனமாக ஆக்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டு அதற்கான ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை நீங்கள் ஆதரிக்கலாம் என தமிழக அரசு சொல்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் இத்திட்டங்களை எதிர்த்து பிரசாரம் செய்து செய்து வந்தேன்.

மத்திய அரசு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துடனும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடனும் 324 கிணறுகள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல்களை ரத்து செய்ய தமிழக அரசு தயாரா?. தமிழக மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று ஏமாற்றக்கூடாது. இது நம்பிக்கை துரோகம். நம்பிக்கை மோசடி. தமிழகத்தில் நீட் தேர்வு, வேண்டாம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக தமிழக அரசு கூறியது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு வந்துவிட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டம் டெல்டா பகுதியை பாலைவனமாக்கி விடும்.

ஏமாற்றும் முயற்சி 

இதுமட்டும் இல்லாமல் கடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்க 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை 2017–ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. இதனை ரத்து செய்ய தயாரா? இவ்வாறு ஒப்பந்தங்கள் போட்டு விட்டு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்போகிறோம் என்று கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.

ஹாலியா நிறுவனத்துடன் ரூ.50 ஆயிரம் கோடிக்கு பெட்ரோலிய ரசாயனம் அமைக்கும் திட்டமும், காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்பட உள்ளது.

பின்விளைவுகள் 

ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழகத்துக்கு மரண அடி என்று நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால் தற்போது மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி, பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என அறிவித்துள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாலைவனமாக்க திட்டமிட்டு ஒரு பக்கத்தில் மேகதாதுவில் அணைகட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள். இவ்வாறு கட்டினால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது. இங்கு விவசாயம் செய்ய முடியாது. நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்க வேண்டிய விபரீதம் ஏற்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் தமிழக அரசு மூடி மறைத்து வருகிறது.

தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், 2017–ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும். இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசின் அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணி நிம்மதியாக உள்ளனர். தமிழகத்தில் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story