கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர், ஜூஸ் விற்க தடை ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது


கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர், ஜூஸ் விற்க தடை ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 13 Feb 2020 10:00 PM GMT (Updated: 13 Feb 2020 3:26 PM GMT)

கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், ஜூஸ் விற்பனை செய்ய வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், ஜூஸ் விற்பனை செய்ய வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு ஊர்வலம்

கொடைக்கானல் மலைப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்குவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மூஞ்சிக்கல் பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டது. இதனை நகராட்சி ஆணையர் நாராயணன், ஆர்.டி.ஓ. சுரேந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் பல்வேறு சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் நகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது. பின்னர் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

இதில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்தும், கொடைக்கானல் மலைப்பகுதியை குப்பை இல்லாத இடமாக மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதிலும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், ஜூஸ் விற்பனை செய்யவும் வியாபாரிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டது. மலைகளின் அரசியான ஊட்டியில் ஏற்கனவே 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோதனைச்சாவடிகள்

இதேபோல் ‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில் தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஓ. சுரேந்திரன், நகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் கூறும்போது, கொடைக்கானல் மலைப்பகுதி பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீர், குளிர்பானங்கள் விற்பனைக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கு அறிவுரை வழங்கப்படும். அதன்பிறகு அபராதம் விதிக்கப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் வில்சன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுகுமாறன், நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், நகராட்சி பொறியாளர் சரவணகுமார், இளநிலை பொறியாளர் பட்டுராஜன், மேலாளர் குமார் சிங் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சுப்பையா நன்றி கூறினார்.

Next Story