சேத்தியாத்தோப்பில், தூக்கில் ஆசிரியை பிணம் - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்


சேத்தியாத்தோப்பில், தூக்கில் ஆசிரியை பிணம் - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 5:36 PM GMT)

சேத்தியாத்தோப்பில் ஆசிரியை தூக்கில் பிணமாக தொங்கினார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அகரஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகள் சரண்யா(வயது 26). இவருக்கும் சேத்தியாத்தோப்பு சென்னிநத்தம் தங்கராசுநகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளவரசன்(28) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் இளவரசன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். சரண்யா, தனது மாமனார், மாமியாருடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சரண்யாவின் அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சரண்யா பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரண்யாவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சரண்யாவின் தந்தை சங்கர் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின் றனர். மேலும் இறந்த சரண்யாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story