கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் ஆபரேட்டர் மீது தாக்குதல்; ஒருவர் கைது


கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் ஆபரேட்டர் மீது தாக்குதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2020 9:30 PM GMT (Updated: 13 Feb 2020 9:01 PM GMT)

கழிவுநீர் அகற்றும் நிலையத்தில், ஆபரேட்டரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 41). இவர் ராமநாதபுரம் நகரசபை பம்பிங் நிலையத்தில் சாக்கடை கழிவுநீர் அகற்றும் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்தில் உள்ள நாகநாதபுரம் பகுதியில் உள்ள பம்பிங் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் மது அருந்துவதற்கு பம்பிங் நிலைய கதவை திறந்துவிடுமாறு கூறி உள்ளனர். இதற்கு கணேசன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் பம்பிங் நிலைய கதவில் ஏறிக்குதித்து உள்ளே சென்றனர். இதைப்பார்த்த கணேசன் அவர்களை கண்டித்து சத்தம் போட்டார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் கணேசனை கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதேவி வழக்கு பதிவு செய்து, நாகநாதபுரம் பூமி மகன் ஏழரை என்ற சரவணன் என்பவரை கைது செய்தார். இதுதொடர்பாக நாகநாதபுரம் மாரி மகன் தனபாலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story