திருக்கானூர்பட்டியில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு


திருக்கானூர்பட்டியில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 11:57 PM GMT)

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களிடமிருந்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

அப்போது அங்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவதையும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். பின்னர் வாடிவாசல் அமைக்கப்பட உள்ள இடத்தையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ள இடத்தினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும் கால்நடைத்துறையின் மூலம் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இட வசதிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். காளையை அடக்கும் வீரர்களின் விவரங்களையும், அவர்களுக்கு தனியாக டி.சர்ட் வழங்கப்படும் விவரத்தையும் கலெக்டர் கேட்டறிந்தார். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகளையும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தாசில்தார் வெங்கடே‌‌ஷ்வரன், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story