தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பெண் வாக்காளர்கள் அதிகம்


தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பெண் வாக்காளர்கள் அதிகம்
x
தினத்தந்தி 14 Feb 2020 11:30 PM GMT (Updated: 14 Feb 2020 2:41 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வெளியிட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் 

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்காக மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன்படி தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அமுதா, தேர்தல் பிரிவு தாசில்தார் நம்பிராயர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தனம், அக்னல், ரவி, முரளிதரன், முத்துமணி, சிவராமன், வரதராஜ், ஞானசேகர், மாடசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதிய வாக்காளர்கள் 

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்தது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் 23–ந் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெறப்பட்ட மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி மொத்தம் 33 ஆயிரத்து 438 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 994 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

14½ லட்சம் பேர் 

அதே போன்று விளாத்திகுளம் தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 715 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 8 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 2 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 107 வாக்காளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 839 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 42 ஆயிரத்து 493 பெண் வாக்காளர்களும், 52 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 384 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 631 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 358 பெண் வாக்காளர்களும், 17 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 6 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 641 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 278 பெண் வாக்காளர்களும், 6 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 925 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 912 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 524 பெண் வாக்காளர்களும், 24 திருநங்கைகள் ஆக மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 460 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 334 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 444 பெண் வாக்காளர்களும், 29 திருநங்கைகளும் ஆக மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 807 வாக்காளர்களும் உள்ளனர்.

பெண்கள் அதிகம் 

மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 11 ஆயிரத்து 72 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 39 ஆயிரத்து 487 பெண் வாக்காளர்களும், 130 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 50 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் வெளியிட்டார்.

Next Story