நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போது மடக்கி பிடித்தனர்


நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போது மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:00 PM GMT (Updated: 14 Feb 2020 3:54 PM GMT)

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி தப்பி ஓடினார்.

நெல்லை, 

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போது போலீசார் மடக்கி பிடித்தனர்.

கூலி தொழிலாளி கைது 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி கெங்காதேவி (25). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். குடும்ப பிரச்சினையின் காரணமாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் விரக்தியடைந்த கெங்காதேவி கோபித்து கொண்டு ஆய்க்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பாலசுப்பிரமணியன் ஆய்க்குடி சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவி கெங்காதேவியை சரமாரியாக தாக்கினார்.

இது குறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று சிறை பாதுகாவலரிடம் கூறினார். இதையடுத்து அவரை பாதுகாப்புடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

தப்பி ஓடினார் 

அங்கு பாலசுப்பிரமணியன் போலீஸ் பிடியில் இருந்து நைசாக தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விசாரணை கைதி பாலசுப்பிரமணியனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தென்காசி செல்வதற்காக பாலசுப்பிரமணியன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தனர். சந்திப்பு போலீசார் விரைந்து சென்று பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story