ஒரே வாகனத்தில் 3 பேர் பயணம்: தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவர் படுகாயம்


ஒரே வாகனத்தில் 3 பேர் பயணம்:   தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி   மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:00 PM GMT (Updated: 14 Feb 2020 5:04 PM GMT)

ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் சென்றபோது, தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஆவடி, 

சென்னை செங்குன்றம் காந்திநகர், கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 22). இவர், தனது நண்பர்களான செங்குன்றம் பம்மதுகுளம் பகுதியைச்சேர்ந்த சிவா(22) மற்றும் மணிகண்டன் (21) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தில் இருந்து ஆவடி நோக்கி வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றார்.

மோட்டார் சைக்கிளை சிவா ஓட்டினார். மற்ற இருவரும் அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தனர். ஆவடியை அடுத்த பாலவேடு அருகே மேம்பாலத்தின் மீது அவர்கள் வேகமாக சென்றுகொண்டிருந்தனர்.

தடுப்பு சுவரில் மோதி பலி

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், வந்த வேகத்தில் சாலையின் இடதுபுறத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, அருகில் இருந்த மின்கம்பத்திலும் பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் வந்த நண்பர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரதீப், மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் மற்ற 2 பேரும் உயிருக்கு போராடினர்.

உயிரிழந்தார்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story