ஆம்புலன்ஸ்- கார் மோதல்; பெண் பலி அய்யப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் காயம்


ஆம்புலன்ஸ்- கார் மோதல்; பெண் பலி அய்யப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் காயம்
x
தினத்தந்தி 14 Feb 2020 9:41 PM GMT (Updated: 14 Feb 2020 9:41 PM GMT)

சேலத்திற்கு மேல் சிகிச்சைக்கு வந்த போது ஆம்புலன்ஸ், கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். அய்யப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்,

சேலம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி செல்வி (வயது 55). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக செல்வியை நேற்று ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். ஆம்புலன்சில் பரமசிவம், அவரது மகள் பரமேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை மாசிநாயக்கன்பட்டி அருகே வந்த போது எதிரே பெங்களூருவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஹரீ‌‌ஷ்குமார், சுப்பிரமணி, மகே‌‌ஷ் ஆகியோர் சபரிமலை கோவிலுக்கு சென்று விட்டு பெங்களூருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் வழி தவறி சென்னை சாலையில் வந்தனர். அப்போது ஆம்புலன்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஆம்புலன்ஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்வி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் வந்த ஹரீ‌‌ஷ்குமார், சுப்பிரமணி, மகே‌‌ஷ் மற்றும் ஆம்புலன்சில் இருந்த பரமசிவம், பரமேஸ்வரி ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் பட்ட 5 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்ததும் ஆம்புலன்ஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story