கூட்டணி கட்சி தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை கூற வேண்டாம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுரை


கூட்டணி கட்சி தலைவர்கள்   சர்ச்சை கருத்துகளை கூற வேண்டாம்   முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுரை
x
தினத்தந்தி 14 Feb 2020 10:56 PM GMT (Updated: 14 Feb 2020 10:56 PM GMT)

கூட்டணி கட்சி தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூற வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கொள்கை ரீதியில் முரண்பாடான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி ஆட்சி நடத்தி வருகின்றன. எனினும் ஆட்சி அமைந்த நாள் முதல், 3 கட்சி தலைவர்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பத்திரிகை ஒன்றில் வீர சாவர்க்கர் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்துத்துவா கொள்கையை கொண்ட சிவசேனா வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கட்டுரை கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

முதல்-மந்திரி அறிவுறுத்தல்

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் ஒருங்கிணைப்பு கமிட்டியில் உள்ள 3 கட்சி தலைவர்களையும் வர்ஷா பங்களாவில் சந்தித்து பேசினார். அப்போது அவர், கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மந்திரி ஒருவர் கூறுகையில், “சர்ச்சையை ஏற்படுத்தும் தேவையில்லாத கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும் என முதல்-மந்திரி கூறினார். இதேபோல கட்சி பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதை தடுக்குமாறும் 3 கட்சிகளை சேர்ந்த தலைவர்களிடம் முதல்-மந்திரி கேட்டு கொண்டார்” என்றார்.

Next Story