வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 20-ந் தேதி தொடங்குகிறது


வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 20-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 Feb 2020 10:00 PM GMT (Updated: 15 Feb 2020 3:29 PM GMT)

சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இன்று முதல் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

குலசேகரம், 

குமரி மாவட்டத்தில் கல்குளத்தை சுற்றிலும் முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் “கோபாலா... கோபாலா... கோவிந்தா...’’ என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு சிவராத்திரி வருகிற 21-ந் தேதி வருகிறது. இதையொட்டி சிவாலய ஓட்டம் வருகிற 20-ந் தேதி புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார் கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக 21-ந் தேதி நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள்.

சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள். இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் காவி உடை அணிந்து, தோளில் சுருக்குபை, கையில் விசிறி ஆகியவற்றுடன் ஓடுவார்கள். ஒவ்வொரு சிவாலயத்திற்கு சென்றவுடன் அங்குள்ள நீர் நிலையில் குளித்துவிட்டு சாமி கும்பிடுவார்கள். பின்னர் அங்கு காணிக்கை செலுத்தி பிரசாதம் வாங்கிய பின்பு அடுத்த சிவாலயத்தை நோக்கி செல்வார்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். விரத நாட்களில் அசைவ உணவு பொருட்களை தவிர்த்து, தினமும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வழிபடுவார்கள்.

Next Story