பரிசோதனை அறிக்கையை வீசி எறிந்த டாக்டரிடம் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு


பரிசோதனை அறிக்கையை வீசி எறிந்த   டாக்டரிடம் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு
x
தினத்தந்தி 15 Feb 2020 11:57 PM GMT (Updated: 15 Feb 2020 11:57 PM GMT)

பரிசோதனை அறிக்கையை வீசி எறிந்த டாக்டரிடம் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, குருவப்ப செட்டித் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 53). இவர், தெற்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர்மையத்தில் தாக்கல் செய்துள்ள மனு கூறியிருப்பதாவது:-

‘எனது உள்ளங்காலில் வலி ஏற்பட்டதால், சேப்பாக்கத்தில் உள்ள ஒரு டாக்டரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிகிச்சைக்காக சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர், கால் நரம்புகள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, சில பரிசோதனைகளை செய்யும்படி பரிந்துரைத்தார். இதை ஒரு ‘ஸ்கேன்’ மையத்தில் தான் பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், அங்கு அதிக கட்டணம் கேட்டதால், மகாலிங்கபுரத்தில் அறக்கட்டளை ஒன்று நடத்தி வரும் ஒரு ‘ஸ்கேன்’ மையத்தில், இந்த பரிசோதனைகளை செய்தேன்.

இந்த பரிசோதனை அறிக்கையை டாக்டரிடம் காட்டியபோது, அவர் தான் சொன்ன மையத்தில் பரிசோதனை செய்யவில்லை என்று கூறி அந்த அறிக்கையை வீசி எறிந்தார். சிகிச்சை அளிக்கவும் மறுத்துவிட்டார். இவரது செயல், புனிதமான டாக்டர் தொழிலுக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் மரபையும், விதிகளையும் மீறி செயல்பட்டுள்ளதால், எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க டாக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி டாக்டருக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

Next Story