உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்


உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்
x
தினத்தந்தி 16 Feb 2020 8:16 AM GMT (Updated: 16 Feb 2020 8:16 AM GMT)

அவள் மூன்று பெண்களில் கடைசியாக பிறந்தவள். மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவே, பெற்றோர் படாதபாடுபட்டுவிட்டார்கள். குடியிருந்த வீட்டை விற்கவேண்டிய நிலை உருவானது. அக்கம்பக்கம் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் அல்லல்பட்டுக்கொண்டிருந்தார்கள். அதனால் இளையமகளான இவளது திருமணத்தை பற்றி அவர்களால் சிந்தித்து பார்க்கவே முடியவில்லை.

பெற்றோரின் பணநெருக்கடியை குறைக்க அவள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு சென்றாள். அவள் அழகான தோற்றம் கொண்டவளாக இருந்ததால், இருபது வயதுகளில் இருக்கும்போதே அவளுக்கு இளைஞர்கள் சிலர் காதல் வலைவீசினார்கள். குடும்ப நலனுக்கு அது எதிராக அமைந்துவிடும் என்று கருதி அவள் காதலை கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டாள்.

அழகும், இளமையும் குறைந்து கொண்டிருந்த நிலையில், 30 வயதில் ‘பெற்றோர் இனி தனக்கு திருமணம் செய்துவைக்க வாய்ப்பில்லை. தானாகவே யாரையாவது காதலித்து மணந்தால்தான் உண்டு’ என்ற முடிவுக்கு வந்தாள்.

அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவர் அவளுடன் பாசமாக பழகிக்கொண்டிருந்தார். திருமணமாகாத அவருக்கு வயது 36. டிரைவராக பணிபுரிவதோடு, வெளியே பழைய கார்களை வாங்கி விற்கும் வேலையையும் செய்தார். அதனால் அவரிடம் ஓரளவு பணம் புழங்கிக்கொண்டிருந்தது. ஆனால் கண்டபடி செலவு செய்துகொண்டிருந்தார். குடிப்பழக்கமும் இருந்தது.

‘இவரையும் விட்டுவிட்டால் இன்னொருவர் அமைவது கடினம்’ என்று கருதிய அவள், அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டாள். இரண்டு பேரும் வேலை செய்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவள், இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டாள்.

இப்போது அவளுக்கு 40 வயது. ஒழுங்கற்ற மாதவிடாய், தொடர்ச்சியான அடிவயிற்று வலி, உடல் பலவீனம், அடிக்கடி காய்ச்சல் என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவள், மருத்துவமனைக்கு சென்றாள். அங்கு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்பு அவள் கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவளது குடும்பத்தில் பலதலைமுறையாக யாருக்கும் புற்றுநோய் ஏற்பட்டதில்லை. குடும்பத்தில் இவள்தான் முதல்முறையாக கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.

சிகிச்சை தொடங்கியது. ‘எப்படியும் குணப்படுத்திவிடலாம்’ என்று டாக்டர் நம்பிக்கையூட்டினார். ஆனாலும் அவள் மிகுந்த மனக்கலக்கத்தில் இருந்தாள். அதற்கு காரணம், அவள் எப்போதுமே உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவள். ஒருபோதும் கண்டதையும் சாப்பிடுவதில்லை. ஓரளவு உடற்பயிற்சி செய்து உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாள். அதனால், ‘தனக்கு அந்த நோய் உருவாக என்ன காரணம்?’ என்பதை கண்டறிந்தே ஆகவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.

அன்று தனது கணவரையும் அழைத்துக்கொண்டு தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சென்றாள். அங்கு தலைமை டாக்டரை சந்தித்த அவள், ‘எனக்கு இந்த நோய் ஏற்பட என்ன காரணம் என்பதை சொல்லுங்கள்?’ என்று விடாப்பிடியாக கேட்டாள்.

அந்த டாக்டர் இருவரிடமும் அவர்களது வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம், மனஆரோக்கியம், பாலுறவு சுகாதாரம் போன்ற பல விஷயங்களை பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டார். பெரும்பாலான கேள்விகள் அவளது கணவரிடம் கேட்கப்பட்டது. அவர் சில கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்ல, டாக்டரோ தெள்ளத்தெளிவாகக் கேட்டு சரியான பதிலை வாங்கிவிட்டார்.

அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தையும் தொகுத்த அவர், தான் ஏற்கனவே கருப்பை வாய் புற்றுநோய் தொடர்பாக ஆய்வு செய்துவைத்திருந்த சர்வே தகவல்களையும் காட்டி, கவலை தோய்ந்த முகத்துடன் ‘திருமணமான பெண்களுக்கு கருப்பை வாய் புற்று நோய் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் இப்போது முக்கியமான காரணமாக இருப்பது, அந்தரங்க சுத்தம் இல்லாமல் இருப்பதுதான். குடித்துவிட்டு மனைவியுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் அதிகரித்துவிட்டார்கள். மற்றவிஷயங்கள் போன்று இதிலும் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள். சுத்தமாக கழுவிவிட்டு பாலுறவுகொள்ளாமல் இதில் அவசரத்தைக்காட்டுகிறார்கள். பாலுறவுக்கு முன்பும்- பின்பும் கழுவி சுகாதாரத்தை பேணாததால் தான் பெரும்பாலான பெண்கள் கருப்பைவாய் புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்’ என்று கூறினார்.

அதை கேட்டு அவள் கண்களில் நீர் சூழ- குடித்துவிட்டு, சுகாதாரமின்றி அவசரகோலத்தில் பாலுறவு வைத்துக்கொள்ளும் அவளது கணவர் குற்றஉணர்வோடு தலைகுனிந்தார். ‘என் மனைவிக்கு இந்த நோய் ஏற்பட நானும் ஒரு காரணமாகிவிட்டேனே!’ என்று கலங்கி அழுதார்.

ஆண்களே புரிந்துகொள்ளுங்கள்! அந்தரங்க சுத்தமின்மை உங்கள் அன்பு மனைவியின் உயிருக்குகூட உலைவைத்துவிடக் கூடும்!

- உஷாரு வரும்.

Next Story