தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை தனிமையில் வசித்து வந்ததால் விரக்தி


தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை தனிமையில் வசித்து வந்ததால் விரக்தி
x
தினத்தந்தி 16 Feb 2020 10:45 PM GMT (Updated: 16 Feb 2020 5:48 PM GMT)

தனிமையில் வசித்து வந்ததால் விரக்தியில் தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

சென்னை,

காஞ்சீபுரம் கே.எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சீதா(வயது 60). இவர்களுடைய மகள் தனலட்சுமி (35), மகன் பாலாஜி (28).

சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் பாலாஜி, தனியாக வசித்து வருகிறார். இதனால் சீதாவும், அவருடைய மகள் தனலட்சுமியும் தனியாக வசித்து வந்தனர்.

தொடர்ந்து தனிமையில் இருந்து வந்ததால் சீதா மற்றும் தனலட்சுமிக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தினருடன் பழகுவதும், பேசுவதும் இல்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் பாலாஜி, தனது தாய் மற்றும் சகோதரியை பார்க்க நேற்று முன் தினம் மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

பூட்டிய வீட்டுக்குள் தாய்- மகள் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாய்-சகோதரியின் உடலை பார்த்து பாலாஜி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story