சென்னையில் 21-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் 1,000 காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு


சென்னையில் 21-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்   1,000 காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு
x
தினத்தந்தி 17 Feb 2020 10:00 PM GMT (Updated: 17 Feb 2020 5:17 PM GMT)

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

சென்னை, 

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் (முழு கூடுதல் பொறுப்பு) வே.வி‌‌ஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையை வேலைவாய்ப்பு வெள்ளிக்கிழமை ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம். முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story