தொட்டில் கட்டி விளையாடிய போது கழுத்தில் சேலை இறுகி மாணவர் சாவு - நாகர்கோவிலில் பரிதாபம்


தொட்டில் கட்டி விளையாடிய போது கழுத்தில் சேலை இறுகி மாணவர் சாவு - நாகர்கோவிலில் பரிதாபம்
x
தினத்தந்தி 17 Feb 2020 11:45 PM GMT (Updated: 17 Feb 2020 10:53 PM GMT)

நாகர்கோவிலில் தொட்டில் கட்டி விளையாடிய போது கழுத்தில் சேலை இறுகி 7-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் முதலியார் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மனைவி ஆன்றோ விஜி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கால்நடைத்துறை அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் ஆன்றோ சப்ரின் (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் குடும்பத்துடன் பெரியகாடு ஆலயத்துக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது ஆன்றோ சப்ரின் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந் தார். அந்த சமயத்தில் திடீரென ஆன்றோ சப்ரின் கழுத்தில் சேலை இறுகியது. இதனால் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.

பின்னர் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆன்றோ சப்ரின் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொட்டில் கட்டி விளையாடிய போது கழுத்தில் சேலை இறுகி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story