நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு


நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 10:30 PM GMT (Updated: 18 Feb 2020 3:33 PM GMT)

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல், 

நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தொடங்கி திருப்பூர் மாவட்டம் வழியாக கரூர் மாவட்டம் வருகிறது. அதன்பின் அந்த ஆறு நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் சாயக்கழிவு நீர் மழைக்காலங்களில் ெநாய்யல் ஆற்றில் கலந்து விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஆற்றில் சாயக்கழிவு நீரே அதிக அளவில் வருகிறது. இந்தநிலையில் மழைக்காலம் முடிந்த நிலையில் தற்போதும், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் ஓடுகிறது.

நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீர் வருவதால் நொய்யல் ஆற்றில் இருந்து பாசனம் வசதிபெறும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால், விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள ஆழ்துளைக்கிணறு மற்றும் கிணறுகளில் உள்ள தண்ணீரும் மாசுப்பட்டுள்ளது.

இந்த தண்ணீரில் பொதுமக்கள் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பல்வேறு நோய்களும் ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நொய்யல் ராமசாமி கூறியதாவது:-

கடந்த ஆண்டு நொய்யல் ஆற்றில் வந்த வெள்ளப் பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது உப்பின் தன்மை அதிகமாக இருந்தது. உப்புத்தன்மையின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரைத் திறந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக தண்ணீரில் உப்புத் தன்மை அதிகரித்துள்ளதால் பணப்பயிர்கள் காய்ந்து வருகின்றது. நொய்யல் ஆற்று தண்ணீர் விவசாயம் செய்ய உகந்த தண்ணீர் அல்ல. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் மற்றும் காவிரி ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story