எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனையில் குறைந்த எடையில் பிறந்த பெண் குழந்தை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து மறுவாழ்வு


எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனையில்   குறைந்த எடையில் பிறந்த பெண் குழந்தை   டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து மறுவாழ்வு
x
தினத்தந்தி 18 Feb 2020 10:00 PM GMT (Updated: 18 Feb 2020 5:11 PM GMT)

எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனையில் குறைந்த எடையில் பிறந்த பெண் குழந்தை டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் மறுவாழ்வு பெற்றுள்ளது.

சென்னை, 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஷர்வாணி (வயது 24). கூலி தொழிலாளியான இவருக்கு, 7 மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டதால், உடனடியாக, சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கர்ப்பப்பையின் பனிக்குடத்தில் போதியளவில் நீர் இல்லாமல் இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை, 1.1 கிலோவாக இருந்தது. இதனால், குழந்தையின் மற்ற உறுப்புகள் போதியளவில் வளர்ச்சியடையாமல் இருந்தன.

ஒருமாத தீவிர சிகிச்சைக்கு பின், குழந்தை இயல்பு நிலையில் சுவாசிக்க தொடங்கியது. மேலும், உடல் எடையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது:-

குழந்தை பிறந்தபோது, எடை குறைந்து காணப்பட்டது. ஒரு மாதம் குழந்தை தீவிர கண்காணிப்பில் இருந்தது. தற்போது குழந்தையின் எடை, 1.4 கிலோ அதிகரித்துள்ளது. குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியதால், தாயும், குழந்தையும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின், குறை பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் போதியளவில் உள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.

Next Story