கோவில் குளத்தின் கரையில் கட்டியிருந்த 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது


கோவில் குளத்தின் கரையில் கட்டியிருந்த 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 7:04 PM GMT)

நாகையில் கோவில் குளத்தின் கரையில் கட்டியிருந்த 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் சிவன் கோவில் வடகரையில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகே சிவன் கோவில் குளம் உள்ளது. இந்த குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் குளத்தின் வடகரையில் வசிக்கும் சலவை தொழிலாளியான கண்ணன் (வயது 64), பழைய துணிகள் விற்பனை செய்யும் ஆனந்த் (55), பெயிண்டர் சங்கர் (55) ஆகிய 3 பேரின் வீட்டின் பின்பக்க சுவர் நேற்று திடீரென அடுத்தடுத்து இடிந்து குளத்தின் உள்ளே விழுந்தது. அப்போது வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரங்கள் அனைத்தும் குளத்தில் மூழ்கியது. இதில் அதிர்‌‌ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் பிரான்சிஸ், நகராட்சி ஆணையர் ஏகராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேலும் வீடுகளின் சுவர் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story