புதுச்சத்திரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் பாய்ந்த விவசாயி சாவு


புதுச்சத்திரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் பாய்ந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 7:54 PM GMT)

புதுச்சத்திரம் அருகே தென்னைமர நிழலில் டிராக்டரை நிறுத்த சென்றபோது 80 அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் பாய்ந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 53). விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாய பணிகளை செய்து வந்தார்.

நேற்று மாலை 3 மணி அளவில் தனது தோட்டத்தில் உழவு பணியை செய்த அவர், பணி முடிந்ததும் கிணற்றின் அருகே உள்ள தென்னை மரத்தின் நிழலில் டிராக்டரை நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டருடன் சவுந்தரராஜன் கிணற்றில் பாய்ந்தார்.

பரிதாப சாவு

80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சுமார் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது. அந்த தண்ணீரில் டிராக்டர் மூழ்கியது. இதேபோல் டிராக்டருக்கு அடியில் சிக்கி கொண்ட சவுந்தரராஜனும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மாலை 5 மணிக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்து விவசாயி சவுந்தரராஜன் மற்றும் டிராக்டரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 30 அடிக்கு தண்ணீர் இருந்ததால் உடனடியாக மீட்க முடியவில்லை.

டிராக்டர் மீட்பு

எனவே தண்ணீரை மோட்டார் வைத்து இறைத்து கிணற்றில் இருந்து வெளியேற்றி விட்டு விவசாயி சவுந்தரராஜன் மற்றும் டிராக்டரை மீட்க முடிவு செய்தனர். இதையடுத்து பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிரேன் உதவியுடன் டிராக்டர் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதேபோல் சவுந்தரராஜன் உடலையும் கிணற்றில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தென்னை மர நிழலில் டிராக்டரை நிறுத்த சென்றபோது நடந்த இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story