பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவு: 25 ஆண்டுகளுக்கு பிறகு லாரி டிரைவர் கைது துப்பு துலங்கியது எப்படி? பரபரப்பு தகவல்


பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவு:   25 ஆண்டுகளுக்கு பிறகு லாரி டிரைவர் கைது   துப்பு துலங்கியது எப்படி? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:17 PM GMT (Updated: 18 Feb 2020 11:17 PM GMT)

பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர், 25 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு, 

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்தப்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், யாரோ மர்மநபர் அந்த பெண்ணை கற்பழித்துவிட்டு ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் கடந்த 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி நடந்தது.

இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சித்த அனுமய்யா என்பவர் தான் அந்த பெண்ணை கற்பழித்து கொன்றது தெரியவந்தது. இதற்கிடையே சித்த அனுமய்யா தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடினார்கள். அவரை பற்றி எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு கொரட்டகெரே போலீசார், பெண்ணை கற்பழித்து கொன்ற குற்றவாளி தலைமறைவாகி விட்டதாக துமகூரு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

சித்த அனுமய்யா எங்கிருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்காததால், அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) துமகூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக வம்சி கிருஷ்ணா நியமிக்கப்பட்டார். பதவி ஏற்ற பிறகு கொரட்டகெரே போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர், நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்தார்.

அப்போது கொரட்டகெரேயில் பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படாமல், வழக்கு 25 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா, கொரட்டகெரே போலீஸ் இன்ஸ்பெக்டர் நதாப் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். மேலும் அவர் விசாரணையை முடுக்கி விட்டார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு கைது

இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கற்பழிப்பு கொலை வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். இந்த வழக்கில் போலீசார் முழுவீச்சில் இறங்கிய பிறகு, சித்த அனுமய்யா பற்றி சில துப்புகள் கிடைத்தது. அந்த தகவல்களை வைத்து கொரட்டகெரே போலீசார் சித்த அனுமய்யாவை நெருங்கினார்கள். இந்த நிலையில், சித்த அனுமய்யா பெங்களூரு நெலமங்களாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் நெலமங்களாவுக்கு சென்று அங்கு வசித்து வந்த சித்த அனுமய்யாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக கொரட்டகெேரவுக்கு அழைத்து சென்றுள்ளனர். பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த சித்த அனுமய்யா, 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துப்பு துலங்கியது எப்படி?

இந்த நிலையில், பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்ய துப்பு துலங்கியது எப்படி என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடந்த 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி பெண்ணை கற்பழித்து கொலை செய்த சித்த அனுமய்யா, போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக கொரட்டகெரேயில் இருந்து மும்பைக்கு தப்பி சென்றுவிட்டார். தொடக்கத்தில் அங்கு லாரி கிளீனராக வேலை பார்த்து வந்த சித்த அனுமய்யா, பின்னர் அங்கேயே லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில ஆண்டுகள் கழித்து மும்பையில் இருந்து கர்நாடக மாநிலம் கொப்பலுக்கு வந்த சித்த அனுமய்யா, அங்கு லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அங்கு தனது பெயரை சிவராஜ் என மாற்றிக் கொண்ட அவர், அதேப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அங்கிருந்து பெங்களூரு நெலமங்களாவுக்கு வந்து 2-வது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ெநலமங்களாவில் வேலை பார்த்தபோது அவருடைய உறவினர் ஒருவரை சித்த அனுமய்யா பார்த்துள்ளார். அப்போது அவர், உறவினரிடம் தனது முதல் மனைவி பற்றி விசாரித்துள்ளார். மேலும் தனது ஊருக்கு ெசன்றால் தனது மனைவியிடம் நலம் விசாரிக்கும்படியும் சித்த அனுமய்யா, அவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர், கொரட்டகெரே சென்று சித்த அனுமய்யாவின் மனைவி ஈரமல்லம்மாவிடம் நலம் விசாரித்துள்ளார். இதையடுத்து கற்பழிப்பு கொலை வழக்கு தொடர்பாக புதிய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் ஈரமல்லம்மாவிடம் விசாரித்தபோது, உறவினர் ஒருவரிடம் கணவர் நலம் விசாரிக்க கூறியதாக அவர் தெரிவித்தார். போலீசார், அந்த உறவினரை பிடித்து விசாரித்ததில், சித்த அனுமய்யா பெங்களூரு நெலமங்களாவில் பெயரை மாற்றிக் கொண்டு வசிப்பது தெரியவந்தது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

புதிய போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணாவின் நடவடிக்கையால் 25 ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான சித்த அனுமய்யாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story