குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்   தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்   முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2020 12:25 AM GMT (Updated: 19 Feb 2020 12:25 AM GMT)

மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்.

மும்பை, 

மத்திய அரசின் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மராட்டியத்திலும் எதிர்ப்பு

மராட்டியத்திலும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிவசேனா கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மராட்டியத்தில் தடை இல்லை என்று நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தடுக்க மாட்டோம்

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வேறு. குடியுரிமை திருத்தச் சட்டம் மராட்டியத்தில் அமல்படுத்தப்படும் என யாரும் கவலைப்பட வேண்டாம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டால் அது மராட்டியத்தில் அமல்படுத்தப்படாது. இந்த சட்டத்தால் இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஆதிவாசி மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால் என்.பி.ஆர். என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறை தான். ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இது நடக்கும் போது யாரும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் கருதவில்லை. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தேன். எனவே இதை மராட்டியத்தில் அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. இதை நாங்கள் தடுக்க மாட்டோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரலில் தொடங்குகிறது

என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை புதுப்பிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.

அசாம் மாநிலம் தவிர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணி நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.3,941 கோடியை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story