கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் போராட்டம்


கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 10:15 PM GMT (Updated: 19 Feb 2020 4:21 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக முஸ்லிம் அமைப்புகள் அறிவித்தன. 

இதேபோல கரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடபோவதாக கரூர் மாவட்ட முஸ்லிம் அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனால் நேற்று காலை முதலே மாவட்ட கலெக்டர் அலுலகம் முன்பு தடுப்பு கட்டைகள் வைக்கப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து முஸ்லிம்கள் பலர் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கூடி நின்றனர். இதையடுத்து அனைத்து முஸ்லிம் அமைப்பினர் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் சுல்தான் ஸய்யத் இப்ராஹிம் ர‌ஷாதீ ஹஜ்ரத் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டது போன்று, தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினரும் பலர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் முடிவில் ஜமாஅத்து உலமாக்கள் சார்பில் கலெக்டர் அலுலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Next Story