தா.பழூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 352 காளைகள் சீறிப்பாய்ந்தன 32 பேர் காயம்


தா.பழூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 352 காளைகள் சீறிப்பாய்ந்தன 32 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Feb 2020 11:30 PM GMT (Updated: 19 Feb 2020 4:36 PM GMT)

தா.பழூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 352 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 32 பேர் காயம் அடைந்தனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மிக்கேல்பட்டி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது பின்னர். ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்ட பின் தொடர்ந்து மிக்கேல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது.

முன்னதாக உடையார்பாளையம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி தலைமையில் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதித்து தகுதியானவைகளை மட்டுமே அனுமதித்தனர். இதேபோல் தா.பழூர் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதித்து தகுதியானவர்களை மட்டுமே மாடுகளை பிடிக்க அனுமதித்தனர்.

352 காளைகள்

இதைத்தொடர்ந்து காலை 7 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். பின்னர் தா.பழூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து வந்த காளைகளும், அதை தொடர்ந்து திருச்சி, லால்குடி, மணப்பாறை, முசிறி, தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து வந்திருந்த காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 352 காளைகள் களமிறங்கின. 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர். இதில் சில காளைகள் வீரர்களிடம் சிக்கியது. சில காளைகள் வீரர்களை பந்தாடி விட்டு சென்றது.

தொடர்ந்து பிடிபடாத காளைகளுக்கும், வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வெள்ளிக்காசுகள், ரொக்கப்பரிசுகள், டைனிங் டேபிள்கள், சைக்கிள்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

32 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்றபோது, மாடு முட்டியதில் வீரர்கள் மற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சரவணன் (வயது 16), அறிவுச்செல்வன் (25) உள்பட 32 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.

ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தா.பழூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் அந்தோணிசாமி, துணைத்தலைவர் பாபு, செயலாளர் பிளமின்ராஜ், பொருளாளர் ஞானபிரகாசம் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story