தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ஏராளமானோர் பங்கேற்பு


தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ஏராளமானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 9:30 PM GMT (Updated: 20 Feb 2020 3:36 PM GMT)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

விளையாட்டு போட்டி 

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இந்த போட்டி தொடக்க விழா நேற்று காலை நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். வ.உ.சி. பள்ளி முதல்வர் மீனாகுமாரி பேசினார். முடிவில் தூத்துக்குடி மாவட்ட தடகள கழக செயலாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

பரிசு 

தொடர்ந்து கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையோர், காதுகேளாதோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், பந்து எறிதல், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து போட்டி, எறிபந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு சிறப்பு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story