போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை: சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள்தண்டனை நிறுத்திவைப்பு - ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை: சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள்தண்டனை நிறுத்திவைப்பு - ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:00 PM GMT (Updated: 20 Feb 2020 8:05 PM GMT)

போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை நிறுத்தி வைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதுடன் ஜாமீனும் வழங்கியது. மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

நான் கடந்த 2014-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தேன். எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை மகன் செய்யது முகம்மது (வயது 24). மெக்கானிக்கான இவர் மீது திருட்டு புகார் வந்தது. இது குறித்து விசாரிக்க எஸ்.பி.பட்டினம் போலீசார் 14.10.2014 அன்று செய்யது முகம்மதுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணை அதிகாரியான நான், அவரிடம் விசாரணை நடத்தியபோது, கத்தியால் என்னை கொலை செய்யும் நோக்கத்தில் செய்யது முகம்மது தாக்க வந்தார். நான், என்னை தற்காத்து கொள்வதற்காக என்னிடம், இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டேன். இதில் செய்யது முகம்மதுவின் இடது மார்பில் குண்டு பாய்ந்தது. அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் என் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரிக்க வலியுறுத்தி செய்யது முகம்மது, தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து, என் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன்.

என் மீதான கொலை வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டு, எனக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் சமீபகாலமாக பணியும் இல்லாததாலும், எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதாலும், அபராத தொகையை கட்ட இயலாத சூழ்நிலையில் உள்ளேன்.

மேலும், பணியில் இருந்த என் மீது கொலை செய்யும் நோக்கத்துடன் செய்யது முகம்மது கத்தியால் தாக்க வந்ததால்தான் நான் துப்பாக்கியால் சுட நேர்ந்தது. மேலும் என் மீது வேறு எந்த புகார்களும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், துப்பாக்கியால் சுட்டதில் இறந்த செய்யது முகம்மது மதுபோதையில் இருந்ததாகவும், அவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் திருச்சியில் தங்கியிருந்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட வேண்டும் என நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.

Next Story