சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் சிவாலய ஓட்டம் முன்சிறையில் தொடங்கியது


சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் சிவாலய ஓட்டம் முன்சிறையில் தொடங்கியது
x
தினத்தந்தி 20 Feb 2020 11:00 PM GMT (Updated: 20 Feb 2020 10:37 PM GMT)

சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நேற்று முன்சிறையில் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் கல்குளத்தை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்களுக்கு சிவராத்திரியையொட்டி பக்தர்கள் ஓடி சென்று வழிபடுவார்கள். இவர்கள் முன்சிறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்குவார்கள். அங்கிருந்து திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு சிவராத்திரி விழா இன்று (வெள்ளிக்கிழமை) வருகிறது. இதையொட்டி சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. முன்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். முன்னதாக, அவர்கள் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் பிரசாதம் வாங்கி கொண்டு, ‘கோவிந்தா... கோபாலா...’ பக்தி கோஷத்துடன் ஓட்டத்தை தொடங்கினர்.

திக்குறிச்சி

அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெட்டுமணி, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். அங்கு அருகில் உள்ள ஆற்றில் புனித நீராடிவிட்டு கோவிலில் சாமி கும்பிட்டனர். பின்னர் பிரசாதம் வாங்கி விட்டு அடுத்த கோவிலான திற்பரப்பு மகாதேவர் கோவில் நோக்கி சென்றனர். இவ்வாறு நேற்று இரவு முழுவதும் பக்தர்கள் இடைவெளியில்லாமல் ஒவ்வொரு கோவிலாக ஓடி சென்று தரிசனம் செய்தார்கள். இதனால், நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மார்த்தாண்டம், திக்குறிச்சி போன்ற பகுதிகளில் சாலையோரம் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. இவர்களுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் குடிநீர், மோர், குளிர்பானம், அன்னதானம் போன்றவை வழங்கினர். இந்த ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

விடிய விடிய சாமி தரிசனம்

நேற்று ஓட்டத்தை தொடங்கி பக்தர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) 12-வது சிவாலயமான சங்கர நாராயணர் கோவிலில் முடித்து கொள்கிறார்கள். அங்கு இரவு முழுவதும் விடிய விடிய சாமி தரிசனம் செய்துவிட்டு நாளை (சனிக்கிழமை) காலையில் வீடு திரும்புவார்கள்.

நேற்று தொடங்கிய சிவாலய ஓட்டத்தில் குமரி, கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறி, சுருக்கு பையுடன் கலந்து கொண்டனர்.

வாகனங்களில்

சில பக்தர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் குடும்பத்துடன் சிவாலய தரிசனத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு வாகனங்களில் செல்லும் பெரும்பாலான பக்தர்கள் இன்று முன்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து பயணத்தை தொடங்குவார்கள். அவர்கள் ஒரே நாளில் அனைத்து சிவாலயங்களையும் தரிசனம் செய்வார்கள்.

இதனால், நேற்று முதல் 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவில்களின் அருகே பக்தர்கள் இளைப்பாற வசதி செய்யப்பட்டிருந்தது. சிவராத்திரியையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story