கடன் தொகையை திருப்பி கேட்டு வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை


கடன் தொகையை திருப்பி கேட்டு   வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2020 10:30 PM GMT (Updated: 21 Feb 2020 9:49 PM GMT)

கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் கிராமம் வேணுகோபால் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வேணு (வயது 52), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில், அதனை திருப்பி செலுத்தும்போது ஒரு மாத தவணை பாக்கி இருந்ததாக தெரிகிறது.

வங்கி ஊழியர்கள் இருவர் வேணுவின் வீட்டுக்கு வந்தனர். கடன்தொகை செலுத்தவில்லை என்று கூறி வேணுவை தரக்குறைவாக திட்டி உள்ளனர்

விஷம் குடித்தார்

கடன் தொகையை செலுத்த தவறினால் வீட்டுக்கு சீல் வைப்போம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நடந்தவற்றை அக்கம்பக்கத்தினர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்

இதனால் மனம் உடைந்த வேணு வங்கி ஊழியர்கள் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு பெரியபாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்

சாவு

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வேணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story