நெல்லை அருகே பலாத்கார வழக்கில் தொழிலாளி கைது பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது


நெல்லை அருகே பலாத்கார வழக்கில் தொழிலாளி கைது பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது
x
தினத்தந்தி 22 Feb 2020 9:45 PM GMT (Updated: 22 Feb 2020 3:54 PM GMT)

நெல்லை அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நெல்லை, 

நெல்லை அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்து போனது.

இளம்பெண் பலாத்காரம் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கீழக்காலனியை பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் முத்துகுமார் (வயது 30). கூலித்தொழிலாளி.

இவர் நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்த 24 வயது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையை முத்துக்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. ஆனால் இவர் அதனை மறைத்து, இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த பெண் 9 மாத கர்ப்பிணி ஆனார்.

கைது 

இதுகுறித்து நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார்.

இதற்கிடையே அந்த பெண் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தாய், குழந்தைக்கு நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. நேற்று காலை குழந்தை பரிதாபமாக இறந்தது. பெண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story