பல்கலைக்கழகம் அருகே பரிதாபம் கணவருடன் கோவிலுக்கு சென்ற பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி சாவு


பல்கலைக்கழகம் அருகே பரிதாபம் கணவருடன் கோவிலுக்கு சென்ற பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி சாவு
x
தினத்தந்தி 22 Feb 2020 10:15 PM GMT (Updated: 22 Feb 2020 9:10 PM GMT)

குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு கணவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

நாகமலைபுதுக்கோட்டை,

மதுரை ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் மகா சிவராத்திரியையொட்டி தனது மனைவி பாண்டியம்மாளுடன் (48) செல்லம்பட்டி அருகே பாப்பாபட்டியில் உள்ள அவர்களது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று இருந்தார். சாமி கும்பிட்டு விட்டு இருவரும் மதுரையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வந்த போது பின்னால் அரசு பஸ் வந்துள்ளது. பஸ் வேகமாக வருவதைக்கண்டு இரு சக்கர வாகனத்தை சாலையோரமாக கீழே இறக்க முயற்சித்தார்.

தலை நசுங்கி சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்திலிருந்து பாண்டியம்மாள் தவறி சாலையில் விழுந்தார். அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். முருகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story