வேடசந்தூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது டிரைவர் உயிர் தப்பினார்


வேடசந்தூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது டிரைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 23 Feb 2020 12:00 AM GMT (Updated: 22 Feb 2020 9:41 PM GMT)

வேடசந்தூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

வேடசந்தூர்,

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை பாலக்கோடுவை சேர்ந்த ராமன்(வயது 40) ஓட்டிவந்தார். நேற்று அதிகாலை திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே ஒட்டன்சத்திரம் செல்லும் சாலை பிரிவு மேம்பாலத்திற்கு முன்பு வந்தபோது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள இரும்பு தடுப்பில் மோதியது. இதில் முன்பக்க டயர் வெடித்தது. இதைத்தொடர்ந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.

டிரைவர் உயிர் தப்பினார்

அப்போது டிரைவர் ராமன் லாரியில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதில் அவருக்கு இடுப்பில் லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story