மாமல்லபுரம் முகுந்தநாயனார் கோவிலில் சாலை சீரமைக்கும் பணி தீவிரம் தொல்லியல் துறை நடவடிக்கை


மாமல்லபுரம் முகுந்தநாயனார் கோவிலில் சாலை சீரமைக்கும் பணி தீவிரம் தொல்லியல் துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2020 10:30 PM GMT (Updated: 23 Feb 2020 5:43 PM GMT)

மாமல்லபுரம் முகுந்தநாயனார் கோவிலில் சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் அங்கு ஏராளமான குடைவரை கோவில்களையும், குடைவரை மண்டபங்களையும் வடிவமைத்துள்ளனர். இதில் குறிப்பாக கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது.

அதேபோல் கிருஷ்ண மண்டபம், வெண்ணை உருண்டைக்கல், முகுந்தநாயனார் கோவில் உள்ளிட்டவை முக்கிய புராதன சின்னங்களாக திகழ்வதால் தொல்லியல் துறை இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.

இந்தநிலையில் கோவளம் சாலையில் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள முகுந்தநாயனார் கோவிலில் சமூக விரோதிகள் சிலர் உள்ளே புகுந்து மது குடிப்பது, காதல் ஜோடிகள் அதனுள் புகுந்து சில்மிஷ நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற அத்துமீறும் செயல்கள் நடைபெற்றதால் அந்த கோவிலுக்குள் சுற்றுலா பயணிகள் மற்றும் காதல் ஜோடிகள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டு, அவற்றை தொல்லியல் துறை கம்பிவேலிகள் அமைத்து பாதுகாத்து வந்தது.

ஒற்றை கல்லில் வடிக்கப்பட்ட இந்த கோவிலுக்குள் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தரும் கற்சிலை உள்ளது. இந்த சிவலிங்கத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் கற்பூரம் ஏற்றி 2 கால பூஜைகள் செய்து வந்துள்ளதாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஐகானிக்சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் சர்வதேச தரத்திற்கு இணையான சுற்றுலா மையமாக உருவாக்க மாமல்லபுரம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால், இங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகளை சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி வருகைக்கு முன் வெண்ணை உருண்டைக்கல், கணேசரதம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளை கிரானைட் கற்களால் நடைபாதைகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு வசதியாக பாதைகள் அமைக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு முகுந்தநாயனார் கோவிலில் சீரமைப்பு பணிகளை தொல்லியல் துறை தொடங்கி உள்ளது. தற்போது இந்த கோவிலில் வெள்ளை மார்பிள் கல்லில் நடைபாதை அமைத்தல், அழகிய புல் வெளிகள் அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பிரத் யேகமான வெள்ளை நிற கற்கள் கொண்டு வரப்பட்டு கல் தச்சர்கள் மூலம் சதுர வடிவில் கற்கள் செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது தொல்லியல் துறை இந்த கோவிலை சுற்றி கம்பி வேலிகள் அமைத்து பாதுகாத்து வருகிறது. நடைபாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட பிறகு, வழக்கம்போல் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றைக்கல் ரதத்தில் காட்சி தரும் இந்த கோவிலை சுற்றுலா பயணிகள் பார்வையிட திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தற்போது தொல்லியல் துறை இங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story