போடிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: அடங்க மறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் மாடு முட்டியதில் 19 பேர் காயம்


போடிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: அடங்க மறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் மாடு முட்டியதில் 19 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:30 PM GMT (Updated: 23 Feb 2020 9:45 PM GMT)

நாமக்கல் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் அடங்க மறுத்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் மாடுகள் முட்டியதி்ல் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.

எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

தொடக்கமாக ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் அனைவரும் அமைச்சர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

411 காளைகள் சீறிப்பாய்ந்தன

இதையொட்டி காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து கயிறு அறுத்து விடப்பட்டன. இவற்றை அடக்க எருமப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 298 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர். இவர்கள் சுழற்சி முறையில் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். காளைகள் தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை தூக்கிவீசும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. இருப்பினும் அடங்க மறுத்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு குத்துவிளக்கு, குடம், சில்வர் பாத்திரங்கள், வேட்டி, வெள்ளிக்காசு மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல் ஜல்லிக்கட்டில் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளியே வரும் பெரும்பாலான காளைகள் ஓட்டம் பிடித்து விட்டாலும், ஒரு சில காளைகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து வீரர்களை பயமுறுத்தியதை காண முடிந்தது. இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், போடிநாயக்கன்பட்டி, மங்களபுரம் பகுதிகளை சேர்ந்த காளைகள் மற்றும் திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் என மொத்தம் 411 காளைகள் சீறிப்பாய்ந்தன.

19 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இவர்கள் காளைகள் முட்டி படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர்களான நாமக்கல் சந்தைபேட்டைபுதூர் சிவக்குமார் (வயது 37), பொன்னேரி கார்த்திக் (29), காவக்காரன்பட்டி பிரபாகரன் (23), புதுப்பட்டி லோகேஸ்வரன் (24) என 4 பேருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்களை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் காளைகள் முட்டியதில் காயம் அடைந்த கோணங்கிபட்டி பாலுசாமி (30), ராசிபுரம் மணிகண்டன் (33), போடிநாயக்கன்பட்டி தினே‌‌ஷ்குமார் (23), சேந்தமங்கலம் குமார் (21), பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த சுரே‌‌ஷ் (23), குமார் (25) உள்பட 15 பேர் அங்கேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மொத்தமாக இந்த ஜல்லிக்கட்டியில் மாடுகள் முட்டி தள்ளியதில் 4 மாடுபிடி வீரர்கள், 8 காளைகளின் உரிமையாளர்கள், 7 பார்வையாளர்கள் என மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கிய பொட்டிரெட்டிப்பட்டி ஆனந்த் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல் பரிசாக எல்.இ.டி. டி.வி. வழங்கப்பட்டது. இதேபோல் 19 காளைகளை அடக்கிய போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமாருக்கு 2-வது பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த காளைகளின் உரிமையாளர்களாக தேர்வு செய்யப்பட்ட எருமப்பட்டி பழனிநகர் ரஞ்சித், திருச்சி சாத்தூரை சேர்ந்த சுந்தர் ஆகியோருக்கு பிரிட்ஜ் பரிசாக வழங்கப்பட்டது.

போலீசார் குவிப்பு

25 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டை காண எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும், திருச்சி மாவட்டத்தில் இருந்தும் திரளான பொதுமக்கள் போடிநாயக்கன்பட்டியில் கூடி இருந்தனர். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெற்ற மைதானத்தை சுற்றிலும் திருவிழா போல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் அவ்வப்போது கைத்தட்டி ஆரவாரம் செய்து மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியவாறு இருந்தனர்.

இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதேபோல் தீயணைப்பு வீரர்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதில் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் சாரதா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வரதராஜன், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி உள்பட அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story