மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்


மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:30 PM GMT (Updated: 23 Feb 2020 9:51 PM GMT)

கடூரில், மனைவி கொலை வழக் கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த டாக்டரான கணவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கள்ளக்காதலியும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சோகம் நடந்து உள்ளது.

சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் லட்சுமேஸ்வரா பகுதியில் வசித்து வந்தவர் ரேவந்த். பல் டாக்டரான இவர் பீரூரில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி கவிதா(வயது 31). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் கவிதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதனால் கவிதாவை மர்மநபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்று கடூர் டவுன் போலீசார் கருதினார்கள். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கடூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கவிதாவின் பெற்றோர், எங்கள் மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்றும், அவரை கணவர் ரேவந்த் கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் கவிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் கத்தியால் கழுத்தை அறுக்கப்படுவதற்கு முன்பு, கவிதாவின் வயிற்றில் 2 மயக்க ஊசி போடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. ரேவந்த் டாக்டர் என்பதால், அவர் தான் கவிதாவுக்கு மயக்க ஊசி போட்டு அதன்பின்னர் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ரேவந்த்தும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்த பேஷன் டிசைனரான ஹர்சிதா(32) என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் ரேவந்த், கவிதாவையும், ஹர்சிதா பெங்களூருவில் பி.எம்.டி.சி பஸ் டிரைவராக இருக்கும் சுதீந்திராவையும் திருமணம் செய்து கொண்டனர். ஹர்சிதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஹர்சிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது சுதீந்திரா தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ரேவந்தும், ஹர்சிதாவும் பேசி பழகி வந்தனர். இது அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. ஹர்சிதாவை சந்திக்க ரேவந்த் அடிக்கடி பெங்களூருவுக்கு சென்று வந்து உள்ளார். இதுபற்றி அறிந்த கவிதா, ரேவந்த்தை கண்டித்து உள்ளார். ஆனாலும் ஹர்சிதாவுடனான கள்ளக்காதலை ரேவந்த் கைவிடவில்லை. இதனால் ரேவந்த், கவிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கவிதாவை ரேவந்த் ஒரு நகைக்கடைக்கு அழைத்து சென்று அவருக்கு நகை வாங்கி கொடுத்து உள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது ஹர்சிதாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடும்படி ரேவந்திடம், கவிதா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரேவந்த் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கவிதாவை தீர்த்து கட்ட திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த 2 மயக்க ஊசியை எடுத்து கவிதாவின் வயிற்றில் போட்டு உள்ளார். இதனால் அவர் மயக்கம் போட்டு விழுந்து உள்ளார்.

இதையடுத்து கவிதாவை கார் நிறுத்தும் இடத்திற்கு தூக்கி சென்ற ரேவந்த், கவிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து உள்ளார். பின்னர் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து கொண்டு மகனையும், 7 மாத குழந்தையையும் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார். வீட்டில் நகைகள் காணாமல் போய் இருந்ததால் கவிதாவை மர்மநபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பார்கள் என்று போலீசாரை நம்ப வைப்பதற்காக அவர் நகைகளை தூக்கி சென்று நாடகமாடி உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து ரேவந்த்தை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்த ரேவந்த் தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடூரில் இருந்து அரிசிகெரே செல்லும் வழியில் பண்டிகொப்பலு என்ற கிராமத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக கடூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர், டாக்டர் ரேவந்த் என்பதும், மனைவியை கொலை செய்த தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்த அவர் உப்பள்ளியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் ெதரியவந்தது.

இதனையடுத்து அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரேவந்த் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் கடூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் ரேவந்த் தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த அவரது கள்ளக்காதலி ஹர்சிதா பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் ஜவரேகவுடா படவானேயில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்ற டாக்டர் தற்கொலை செய்தது பற்றி அறிந்த கள்ளக்காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிக்கமகளூரு, பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவி கவிதாவை கொலை செய்த டாக்டர் ரேவந்த், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபோல ரேவந்தின் கள்ளக்காதலியான ஹர்சிதாவும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரேவந்த்-கவிதாவின் 2 குழந்தைகளும், ஹர்சிதாவின் குழந்தையும் தற்போது அனாதையாக நிற்கின்றன.

Next Story