பாதாள பொன்னியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்


பாதாள பொன்னியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:44 PM GMT (Updated: 23 Feb 2020 11:44 PM GMT)

புதுவை பாதாள பொன்னியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுச்சேரி,

மாசி மாத அமாவாசை நாளில் மயானக்கொள்ளை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்கு சென்று சூறையாடுவதாக ஐதீகம். அதன்படி புதுவை மறை மலையடிகள் சாலையில் உள்ள பாதாள பொன்னியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மேலும் பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக மரப்பாலம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தானியங்கள், பழங்கள், சுண்டல், கொழுக்கட்டை மற்றும் சில்லரை நாணயங்களை வாரி இரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச்சென்றனர். இதில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story