கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 24 Feb 2020 11:04 PM GMT (Updated: 24 Feb 2020 11:04 PM GMT)

கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் முருகன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியானது காந்திரோடு, துருகம்சாலை, சுந்தர விநாயகர் தெரு, மணிக்கூண்டு தெரு, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண்ணின் திருமண வயது 18 என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மார்க்கிரேட், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story