தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற  ரூ.7 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:00 PM GMT (Updated: 25 Feb 2020 12:01 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல் 

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக அவ்வப்போது, போதை பொருட்கள், கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பீடி இலை 

அதன்பேரில் நேற்று அதிகாலையில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், முருகன் மற்றும் போலீசார் திரேஸ்புரம் பகுதிக்கு சென்றனர். அவர்கள் நைசாக அங்கு கடற்கரை பகுதியை கண்காணித்தனர். அப்போது தொட்டிப்பாலம் அருகே கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு படகு தனியாக நின்று கொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்று படகில் சோதனை நடத்தினர்.

அந்த படகில் என்ஜின் பகுதியில் பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்ட 33 மூடைகள் இருந்தன. இதனை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 1 டன் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக கடல் வழியாக பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் 

இதைத் தொடர்ந்து போலீசார் பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அந்த மூட்டைகளுடன் படகையும் பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பீடி இலைகளை கடத்த முயன்றதாக நாகூர்கனி என்பவரை மடக்கி பிடித்தனர். அதன்பிறகு, பீடி இலை மூட்டைகள் மற்றும் நாகூர் கனியை சுங்கத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். நாகூர்கனியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story