ரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்; அமைச்சர் திறந்து வைத்தார்


ரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்; அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 26 Feb 2020 10:15 PM GMT (Updated: 26 Feb 2020 12:54 PM GMT)

ஆரணியில் ரூ.2½ கோடியில் புதிய காய்கறி மார்க்கெட்டை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

ஆரணி, 

ஆரணி, மார்க்கெட் ரோடில் உள்ள காந்தி காய்கறி மார்கெட்டில் சில கடைகள் கடந்த 2018–ல் மழையால் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடமும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோரிடம் தெரிவித்து தனியார் பங்களிப்புடன் 144 காய்கறி கடைகள் புதிதாக வடிவமைத்திட கட்டுமான நிதி இயக்குதல், பராமரிப்பு அடிப்படையில் ரூ.2½ லட்சம் மதிப்பில் காய்கறி அங்காடிகள் கட்ட உத்தரவிடப்பட்டது.

அதன் அடிப்படையில் புதியதாக வடிவமைக்கப்பட்ட 144 காய்கறி அங்காடிகள் விரைவான நடவடிக்கை எடுத்து கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர்.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர் சி.விஜயகுமார், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலி, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு புதிய காய்கறி அங்காடிகளையும் கல்வெட்டினையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து காய்கறி மார்கெட் முழுவதையும் அமைச்சர், கலெக்டர் ஆகியோர் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வியாபாரிகளிடம் கூறுகையில், ‘‘காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் வியாபாரம் செய்யுங்கள்’’ என அறிவுறுத்தினர்.

விழாவில் நகராட்சி அலுவலக மேலாளர் நெடுமாறன், பொறியாளர் கணேசன், ஆரணி காந்தி மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சாதிக்பாஷா, செயலாளர் மோகன், பொருளாளர் சங்கர்கணேஷ், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், நகர செயலாளர் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.சம்பத், மாவட்ட துணை செயலாளர்கள் டி.கருணாகரன், ரமணி நீலமேகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் எல்.குமார், செயலாளர் பக்ருதீன், பட்டுச்சேலை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் குருராஜராவ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் செல்வம் மற்றும் அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் காய்கறி வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கே.சுபானி நன்றி கூறினார்.

Next Story