குடியுரிமை திருத்த சட்டம்: எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுகின்றன - சரத்குமார் குற்றச்சாட்டு


குடியுரிமை திருத்த சட்டம்: எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுகின்றன - சரத்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Feb 2020 10:30 PM GMT (Updated: 26 Feb 2020 7:17 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுகின்றன என்று சரத்குமார் கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் இல்ல திருமண விழாவுக்கு வந்த கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை சட்டம் தொடர்பான 1958-ம் ஆண்டைய சட்ட திருத்தம், தற்போதைய திருத்தம் ஆகியவற்றை நன்றாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு இடத்திலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து ஏதும் கூறப்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று எதுவும் சொல்லப்படவில்லை. நாட்டில் அமைதி உள்ள நிலையில் வன்முறை எந்த ரூபத்தில் நடந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். வன்முறை தூண்டப்படுவதாகவே நான் பார்க்கிறேன். எதிர்க்கட்சிகள் தவறான அரசியல் நோக்கத்தோடு சதி செய்து போராட்டத்தை தூண்டி விருகின்றன. இது ஏற்புடையதல்ல. வன்முறையை அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்தது விபத்துதான். அதற்காக படப்பிடிப்பு நிறுவனத்தை குற்றம் சொல்லக்கூடாது. சண்டைக்காட்சிகள் மட்டுமின்றி அனைத்து காட்சிகளுக்கான படப்பிடிப்பின்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கதாநாயகன் மட்டுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சாதாரண ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு தர வேண்டியது அவசியம் ஆகும்.

நடிகர் சங்க பிரச்சினை குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் மனோபாலா இதில் ரஜினி, கமல் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு காணலாம் என்று கூறியுள்ளார். அப்படியானால் அவரே இதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.

நடை பெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி தொடரும். நாங்கள் ஏற்கனவே அந்த கூட்டணியில்தான் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story