சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரி தாக்குதல் ஊழியர்கள் 6 பேர் கைது


சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரி தாக்குதல் ஊழியர்கள் 6 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2020 12:30 AM GMT (Updated: 26 Feb 2020 8:13 PM GMT)

ஓசூர் அருகே சுங்கச்சாவடியில் வேன் டிரைவர், கிளீனர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய ஊழியர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லை சேர்ந்தவர் ஜெகதீ‌‌ஷ்(வயது30). வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் கிரு‌‌ஷ்ணகிரி நோக்கி வேனை ஓட்டி வந்தார். ஓசூர் அருகே அத்திப்பள்ளி சுங்கச்சாவடி பாஸ்டேக்கில் நின்று ஜெகதீ‌‌ஷ் கார்டை பதிவிற்காக வழங்கினார். ஆனால், எந்திரம் பழுது காரணமாக அந்த கார்டு பதிவாகவில்லை, எனவே பணம் செலுத்துமாறு அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் கூறியதாக தெரிகிறது.

ஆனால், எனது அட்டையில் பணம் உள்ளதே, ஏன் ஏற்கவில்லை? என்று ஜெகதீ‌‌ஷ் பணியில் இருந்த பெண் ஊழியரை கேட்டார். இது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் ஊழியர், ஜெகதீசின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீசும், பெண் ஊழியரை திருப்பி அடித்துள்ளார்.

டிரைவர், கிளீனர் மீது தாக்குதல்

இதைப்பார்த்து பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் ஆத்திரம் அடைந்து அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் ஜெகதீசையும் உடன் இருந்த வேன் கிளீனரையும் சரமாரியாக தாக்கினார்கள். மேலும் அங்குள்ள அறைக்குள் அவர்கள் இருவரையும் தர தரவென்று இழுத்து சென்று கம்பியால் தாக்கினர்.

இதில் காயம் அடைந்த டிரைவர் ஜெகதீஷ் மற்றும் கிளீனர் ஆகியோர் அத்திப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ஜெகதீ‌‌ஷ் அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

6 பேர் கைது

இதைத்தொடர்ந்து வேன் டிரைவர் ஜெகதீ‌‌ஷ் மற்றும் கிளீனரை தாக்கிய சுங்கச் சாவடி ஊழியர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் மற்றும் கிளீனர் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story