தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்


தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 5:24 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கைப்பந்து, கபடி, கால்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதேபோல் தனிநபர் பிரிவில் இறகுபந்து, கேரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறனை வெளிப்படுத்தினார்கள்.

பரிசு

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், கேடயம், பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலாஜோன் சுசீலா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்க உதவித்திட்ட அலுவலர்கள் தங்கவேல், வெங்கடேசன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story