தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்


தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:15 PM GMT (Updated: 28 Feb 2020 12:37 PM GMT)

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

தென்காசி, 

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மாசி மகப் பெருவிழா 

தென்மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 8–ந்தேதி வரை தொடர்ந்து விழா நடைபெறுகிறது. விழாவின் 9–ம் திருநாளான 7–ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு சமுதாயத்தினரின் சார்பில் மண்டகப்படி பூஜைகள், சுவாமி–அம்பாள் வீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கலாமணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

வென்னிமலை கோவில் 

பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து 5.15 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் மாலை பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது.

முதல்நாள் திருவிழா காமராஜ்நகர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. வருகிற 9–ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா பல்வேறு சமூகத்தினர் சார்பில் நடைபெறுகிறது.

Next Story