தெப்பத்திருவிழாவையொட்டி மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்


தெப்பத்திருவிழாவையொட்டி மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:45 PM GMT (Updated: 28 Feb 2020 7:30 PM GMT)

தெப்பத்திருவிழாவையொட்டி மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் புஷ்கரணி குளத்தில் உள்ள தாமரை இலைகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 63-வது திவ்ய தேசமாக உள்ளது. இந்த கோவிலில் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) மாசிமக தெப்பத்திருவிழாவும், 9-ந்தேதி தீர்த்தவாரி திருவிழாவும் நடக்கிறது.

இந்த கோவிலுக்கு சொந்தமான புஷ்கரணி தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தெப்பதிருவிழா நடப்பது வழக்கம். சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த குளத்தில் நீர் தேங்கி தாமரை இலைகள், செடி, கொடி, கோரை புற்கள் வளர்ந்து குளம் தூர்ந்து காணப்பட்டன. இதையடுத்து வியாபாரிகள், தெப்ப திருவிழா கமிட்டி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் இந்த குளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த குளத்தில் நான்கு புறமும் தெப்பம் மிதந்து வருவதற்கு வசதியாக 10 ஏக்கர் பரபரப்பளவு உடைய இந்த குளத்தின் 4 திசைகளில் நீரில் படர்ந்துள்ள தாமரை இலைகள், செடி, கொடிகள் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு குளம் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

Next Story