இது குழந்தைகளுக்கான பட்ஜெட்; எடியூரப்பா பெருமிதம்


இது குழந்தைகளுக்கான பட்ஜெட்; எடியூரப்பா பெருமிதம்
x
தினத்தந்தி 5 March 2020 11:15 PM GMT (Updated: 5 March 2020 6:23 PM GMT)

நான் தாக்கல் செய்திருப்பது குழந்தைகளுக்கான பட்ஜெட் என்று முதல்-மந்திரி எடியூரப்பா பெருமையுடன் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

கடந்த 2007-2008-ம் ஆண்டு நான் பொது மக்களுக்கான பட்ஜெட்டை அறிவித்தேன். அதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டது. தற்போது நான் குழந்தைகளுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளேன். இதில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காக ரூ.36 ஆயிரத்து 340 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த பட்ஜெட்டில் 15.28 சதவீத நிதி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள், குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்த ஆண்டில் மத்திய அரசு நிதியுடன் மாநிலத்தில் 7 இடங்களில் சிறுவர்களுக்கான பால பவனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஓசூர் சாலையில் செயல்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்துணர்வு மையங்கள் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மாநிலத்தில் 842 அங்கன்வாடி மையங்களை புனரமைக்க ரூ.138 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ‘உபகாரா’ திட்டத்தின் கீழ் பால பவனம் மையங்களில் இருந்து 21 வயதுக்கு மேல் வெளியேறும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகையும், அவர்களின் வாழ்வாதாரத்துக்காக தொழில் பயிற்சியும் அளிக்கப்படும்.

இதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. புரதச்சத்துடன் கூடிய உணவுகளை அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில பெண்கள் நலத்துறை சார்பில் மாநிலத்தில் உள்ள திருநங்கைகள் குறித்து கணக்கெடுக்க ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்பார்வை இல்லாதவர்களுக்காக அதிநவீன பேசும் திறன் கொண்ட நூலகம், மேலும் அவர்கள் எளிதில் எழுத்துக்களை தொட்டு படிப்பதற்காக அதிநவீன அச்சு எந்திரம் ஆகியவை ரூ.1.10 கோடியில் வாங்கப்பட உள்ளது. நூலகங்கள் பெங்களூரு, கலபுரகியிலும், அச்சு எந்திர அலுவலகம் மைசூருவிலும் அமைக்கப்பட உள்ளது. மேலும் பார்வையற்ற 500 குழந்தைகளுக்கு அவர்களுக்கேற்ற அதிநவீன செல்போன், கைக்கெடிகாரங்கள், நடக்க பயன்படும் தடிகள் ஆகியவை ரூ.1.25 கோடியில் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே பார்வையற்ற குழந்தைகளின் நலனுக்காக அவர்களின் பெற்றோரிடம் தலா ரூ.2 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அது இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பெண்கள் இலவசமாக மாதாந்திர பஸ் பாஸ் பெற்றுக்கொள்ள ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story