திருவாரூரில், நாளை நடக்கிறது: எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா அனைவரும் திரளாக பங்கேற்க வைத்திலிங்கம் எம்.பி. அழைப்பு


திருவாரூரில், நாளை நடக்கிறது: எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா அனைவரும் திரளாக பங்கேற்க வைத்திலிங்கம் எம்.பி. அழைப்பு
x
தினத்தந்தி 5 March 2020 11:00 PM GMT (Updated: 5 March 2020 7:20 PM GMT)

திருவாரூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நாளை (சனிக்கிழமை) நடை பெறும் பாராட்டு விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு வைத்திலிங்கம் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

காவிரிநீ்ர் உரிமையை பாதுகாக்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என முதன் முதலாக 1986-ல் அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜிஆர். கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை வலுப்பெற்றதன் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. காவிரி நீர் பிரச்சினையில் ஒரு தெளிவான நிலைபாட்டை எடுத்து சட்டப்போராட்டம் நடத்தி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெற்றி கண்டார். நடுவர் மன்ற தீர்ப்பையும் அரசிதழில் வெளியிட செய்தார்.

இதற்கு ஒரு இறுதி தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதா வழியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரின் தொடர் நடவடிக்கையால் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது.

சிறப்பு வேளாண் மண்டலம்

தற்போது காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து அதற்கான அரசாணையையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார். இந்த தீரமிக்க நடவடிக்கையினை விவசாயிகளும், பொதுமக்களும், சமூக செயல்பாட்டாளர்களும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு காவிரி டெல்டாவில் விவசாயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த உத்தரவினை வழங்கியதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து விவசாய சங்கங்களும் சேர்ந்து காவிரி ரெங்கநாதன் தலைமையில் பாராட்டு விழா நாளை(சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் நடத்துகின்றனர். இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்துகின்றனர்.

அனைவரும் பங்கேற்க அழைப்பு

வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த நிகழ்வில் விவசாயிகள், பொதுமக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story