கார்கள் மோதல்: தொழிலதிபர் உள்பட 5 பேர் படுகாயம்


கார்கள் மோதல்: தொழிலதிபர் உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 March 2020 10:15 PM GMT (Updated: 5 March 2020 10:13 PM GMT)

சத்திரப்பட்டி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரைக்குடியை சேர்ந்த தொழிலதிபர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்திரப்பட்டி, 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரை சேர்ந்தவர் உமாபதி (வயது 40). தொழிலதிபர். இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரமே‌‌ஷ்கார்த்திக் (47) என்பவருடன் தொழில் சம்பந்தமாக பழனிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை பள்ளத்தூரை சேர்ந்த ராமகிரு‌‌ஷ்ணன் (32) ஓட்டினார்.

வழியில் சத்திரப்பட்டியை அடுத்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது, எதிரே கொடைக்கானலில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த கார், உமாபதியின் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 கார்களின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உமாபதி, அவருடன் வந்த 2 பேர் மற்றும் மற்றொரு காரில் வந்த கொடைக்கானலை சேர்ந்த முனியப்பன் (28), திருச்செல்வம் (29) என 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story