கிடப்பில் போடப்பட்ட தேவிபட்டினம் சாலை சீரமைப்பு


கிடப்பில் போடப்பட்ட தேவிபட்டினம் சாலை சீரமைப்பு
x
தினத்தந்தி 7 March 2020 10:45 PM GMT (Updated: 7 March 2020 7:43 PM GMT)

கிடப்பில் போடப்பட்ட தேவிபட்டினம் சாலை பணிகள் ஊராட்சி தலைவர் முயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பனைக்குளம்,

மாவட்டத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தேவிபட்டினம். இங்கு கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷானத்தை வழிபடுவதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ராமேசுவரம் வரும் பக்தர்கள் தேவிபட்டினத்திற்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனாலும் அங்கு போதிய வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஊராட்சி தலைவர் ஜாகீர் உசேன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அப்போதைய கலெக்டர் நந்தகுமார் பரிந்துரையின் பேரில் தேவிபட்டினத்தில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

அதைதொடர்ந்து இந்த பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு பயணிகள் பயனடைந்து வந்தனர்.

இந்தநிலையில் பஸ்நிலையத்துக்கு செல்லும் சாலை நீண்டகாலமாக அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் அவதியடைந்து வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜாகீர் உசேனின் மனைவி ஹமிதியா ராணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் தலைவராக பொறுப்பேற்றதும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் பஸ் நிலையத்தின் இருபுறமும் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அவை நிறைவடைந்துள்ளது.

Next Story